வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் துப்புரவுப் பணிகளின் போது தப்பிச் சென்றிருந்ததுடன், அதன் போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் பொறுப்பேற்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் குறித்த கைதி திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எவ்வாறாயினும், சிறைச்சாலை அதிகாரிகள் அவரைக் தாக்கியுள்ளதாக உயிரிழந்த கைதியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக்காவலர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி
வெலிக்கடை சிறையில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறையில் உள்ள விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்வதற்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையிலேயே கைதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச்சென்ற கைதியை உடனடியாகப் பின்தொடர்ந்த சிறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பின் பொரெள்ள பகுதியில் வைத்து கைது செய்தனர்.
அப்போது கைதிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு கைதி மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே மற்றொரு சம்பவம் நிகழ்ந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படும் கைதி, சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரெள்ள பகுதியைச் சேர்ந்த ஆர். ஓஷத சஞ்சீவ (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 110 மில்லி கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அந்த 5,000 ரூபா அபராதத்தைச் செலுத்தத் தவறியதால் அவருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.