-கிண்ணியா நிருபர்-
திருகோணமலைக்கும் கல் ஓயா சந்திக்கும் இடையில் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பயணிகளுக்காக இயக்கப்படும் இணைப்பு புகையிரத சேவையானது, தற்போது மிகவும் மோசமான நிலையில் இயங்கி வருவதாக பயணிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

புகையிரதத்தின் மலசல கூடம் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு துருப்பிடித்து, சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.

உள்ளே நுழைய முடியாத அளவிற்கு வீசும் துர்நாற்றம் மற்றும் முறையற்ற நீர் விநியோகம் என்பன பயணிகளை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளன.
சேவையிலிருந்து நீக்கப்பட வேண்டிய பழமையான பெட்டிகளே இச்சேவையில் பயன்படுத்தப்படுகின்றன.
இருக்கைகள் கிழிந்தும் அழுக்கடைந்தும் காணப்படுகின்றன, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் கால்களை வசதியாக வைக்க முடியாத அளவுக்கு இருக்கைகள் நெருக்கமாக உள்ளன.

பல பெட்டிகளில் கதவுகள் இல்லாமலும், ஜன்னல்களை மூட முடியாத நிலையிலும் இருப்பதால் பயணிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
திருகோணமலை புகையிரத நிலைய அதிபர் மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி, தரமான பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
