இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும், புதிய வட்ஸ்அப் காணொளி மோசடி தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு (SL CERT) அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே, இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை மத்திய நிலையம் (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் இந்த மோசடியில் சிக்கி கப்பம் செலுத்த நேரிட்ட நபர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்துள்ளதாக CERT நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
மோசடியாளர்கள் முதலில் அழகான இந்தியப் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி முகநூல் (Facebook) கணக்குகளை உருவாக்கி, நபர்களுக்கு நண்பர் அழைப்புகளை (Friend Requests) அனுப்புகின்றனர். பின்னர் அவர்களின் தகவல்கள் மற்றும் நண்பர் பட்டியலை ஆராய்கின்றனர்.
இலக்கு வைக்கப்படும் நபரின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு வீடியோ அழைப்பை மேற்கொள்கின்றனர். அதில் தோன்றும் பெண் நிர்வாணமாக இருந்து கொண்டு, மறுமுனையில் உள்ள நபரையும் அவ்வாறு செய்யத் தூண்டுகிறார்.
குறித்த நபர் நிர்வாணமாகாவிட்டாலும் கூட, அந்த வீடியோ அழைப்பை ஏற்று சில நிமிடங்கள் உரையாடுவது மோசடியாளர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமானதாகும்.
அவர்கள் அந்த காட்சிகளை நுணுக்கமாகப் பதிவு செய்து, பின்னர் குறித்த நபர் நிர்வாணப் பெண்ணுடன் இருப்பது போன்று எடிட் (Edit) செய்து, அதனை அந்த நபருக்கும் அவரது முகநூல் நண்பர் ஒருவருக்கும் அனுப்புகின்றனர்.
அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிராமல் இருக்க வேண்டுமானால், இந்திய வங்கி கணக்கொன்றிற்கு கப்பம் செலுத்துமாறு கடுமையாக மிரட்டுகின்றனர்.
இந்த மோசடியில் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலுள்ள பிரபலமான நபர்கள் கூட சிக்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்நிய இலக்கங்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்பதில் அதீத எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
ஒருவேளை நீங்கள் இவ்வாறான மோசடி அல்லது மிரட்டலுக்கு உள்ளாகியிருந்தால், எவ்வித பயமும் வெட்கமும் இன்றி உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு இலங்கை CERT நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

