அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை விற்பனை செய்த கெஸ்பேவ, போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பினை நடத்தியது.
வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகார சபை, தற்போது நாடு முழுவதும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி, இன்று சனிக்கிழமை பிலியந்தலை பகுதியை மையப்படுத்தி பல விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் அல்லது பொருட்களைப் பதுக்கி வைத்தல் போன்ற அநீதியான செயல்கள் இடம்பெற்றால், அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.
எந்தவொரு நுகர்வோரும் தமது முறைப்பாடுகளை அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுகிய அழைப்பு இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு சமர்ப்பிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.