எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
பெற்றோல் விலை 12 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், இந்த கட்டணத் திருத்தம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதால், எரிபொருள் விலை உயர்வை கவனத்தில் கொண்டு, தற்போது இரண்டாவது கிலோமீற்றருக்கு வசூலிக்கப்படும் 90 ரூபாய் கட்டணத்தை 10 ரூபாயினால் உயர்த்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போது முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபாயும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. எனவே, இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தையும் 100 ரூபாயாக உயர்த்துவது அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக கடும் சிரமங்களை எதிர்நோக்குவதால், அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நாங்கள் அன்றாடம் உழைக்கும் வருமானத்தைக் கொண்டே குத்தகை மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துகிறோம். நிலைமை இவ்வாறு நெருக்கடியாக மாறினால், இந்தத் தொழிலில் உள்ளவர்கள் எங்கே செல்வார்கள்? அரசாங்கம் ஏன் இது குறித்துச் சிந்திக்கக் கூடாது? நாம் வேறொன்றையும் கேட்கவில்லை, குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு 30 லீற்றர் எரிபொருளையாவது எங்களுக்கு வழங்குமாறு நியாயமான கோரிக்கையையே முன்வைக்கிறோம்.”