ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்புகளை ஏற்படுத்தி, மூன்று போலி இணையதளங்கள் மூலம் ‘SriLankan.apk’ என்ற மொபைல் செயலியை தரவிறக்கம் செய்யத் தூண்டுவதன் வழியாகவே இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.
இந்தச் செயலியானது ஒரு அபாயகரமான ‘பேங்கிங் ட்ரோஜன்’ மென்பொருள் என்றும், இதனை நிறுவுவதன் மூலம் கைபேசியை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் அனுமதியை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்வதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதன் மூலம் தனிப்பட்ட இரகசியத் தரவுகள் திருடப்படுவதுடன், ஒரு பணப்பரிமாற்றத்தைச் செய்ய வைப்பதன் ஊடாக ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல், வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் உறுதிப்படுத்தல் தரவுகளைப் பெற்று, சட்டவிரோதமாக வங்கி கணக்குகளுக்குள் நுழைந்து பணத்தைத் திருடுகின்றனர்.
இந்த மோசடிக்காக 077 4558361, 011 7771979, 074 1142208, 077 5791209 மற்றும் 074 3268200 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
உடனடி நிதி இலாபங்களை எதிர்பார்த்து பொதுமக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.