முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி குறைக்கப்பட்டமையினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட 15.9 பில்லியன் ரூபாய் (1,590 கோடி ரூபா) பாரிய நிதி நட்டத்தை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று திங்கட்கிழமை நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதியரசர்கள் ஆயம், இந்த மனு மீதான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானித்து உத்தரவிட்டது.