சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு வெதுப்பகங்களிற்கு தண்டம்
-யாழ் நிருபர்-
கடந்தமாதம் 12ஆம் திகதி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வையின் கீழ், பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகங்கள் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 2 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டன. குறித்த வெதுப்பகங்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்குகள் கடந்த 24.06.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு பேக்கரியை மூடி சீல்வைக்குமாறும், மற்றைய பேக்கரியை விரைந்து திருத்தி அமைக்குமாறும் கட்டளை வழங்கினார். குறித்த வெதுப்பகம் பா.சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டது.
இதேவேளை நேற்று வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ. லெனின்குமார் இரு பேக்கரி உரிமையாளர்களிற்கும் தலா 80,000/= தண்டம் அறவிட்டதுடன், திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் பேக்கரிகளை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்