உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்துள்ள அளவிற்கு சிகரெட் வரி விதிக்கப்படாததால், 2025 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 25 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சாத்தியமான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Cigarette Tax Leakage Tracker என்ற தரவுகளின்படி, நாடு ஒவ்வொரு விநாடிக்கும் 547 ரூபா, ஒவ்வொரு நிமிடத்துக்கும் 32,842 ரூபா, நாளொன்றுக்கு 47.3 மில்லியன் ரூபா, மாதந்தோறும் 1.4 பில்லியன் ரூபா மற்றும் ஆண்டுக்கு 17.3 பில்லியன் ரூபா வரையிலான வருவாயை இழந்து வருகிறது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்த வருவாய் இழப்பு 8 பில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, சிகரெட்டின் சில்லறை விலையின் குறைந்தது 75 சதவீதம் வரியாக இருக்க வேண்டும். இலங்கை 2018 ஆம் ஆண்டு 74 சதவீத வரி விகிதத்துடன் இந்த இலக்கை அண்மித்திருந்தாலும், 2025 முதல் அது 67 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைச் சரிசெய்ய அனைத்து வகை சிகரெட்டுகளுக்கும் விதிக்கப்படும் உற்பத்தி வரியை (Excise Tax) அரசாங்கம் வர்த்தமானி மூலம் உயர்த்த வேண்டும் என Verité Research பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, 60 மில்லிமீட்டர் அல்லது அதற்கு குறைவான சிகரெட்டுகளுக்கான வரியை 19.35 ரூபாவிலிருந்து 22.90 ரூபாவாகவும், 60 முதல் 67 மில்லிமீட்டர் வரையிலான சிகரெட்டுகளுக்கான வரியை 50.15 ரூபாவிலிருந்து 60.11 ரூபாவாகவும் உயர்த்துவது உள்ளிட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், Ceylon Tobacco Company நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான இலாபம் 17.3 பில்லியன் ரூபா அளவிற்கு குறைவதுடன், அதே அளவிலான கூடுதல் வருவாய் அரசாங்கத்திற்கு கிடைக்கும் என Verité Research தெரிவித்துள்ளது.
இந்த வரி இழப்பை பொதுமக்கள், ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்போர் நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் Cigarette Tax Leakage Tracker இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.