நிதி வேண்டாம் நீதியே வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை

-திருகோணமலை நிருபர்-

நிதி வேண்டாம்- நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலை கப்பல்துறை பகுதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வமைப்பின் தலைவி செபஸ்டின் தேவி ஐநாவில் 52 ஆவது கூட்டத் தொடர் இடம் பெற்று வருகின்ற நிலையில் இம்முறை அங்கே சென்று குரல் எழுப்ப முடியாத நிலையில் இங்கிருந்து நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.

13, 14 வருடங்களாக எங்களுடைய பிள்ளைகளை தேடிக் கொண்டிருக்கின்றோம். இவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் எதுவித தீர்விணையும் பெற்றுத் தரவில்லை. இரண்டு தடவைகள் நாங்கள் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு வருகை தந்து உங்களுடைய பிரச்சினைகளை கூறினோம். ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

இருந்த போதிலும் இம்முறை எமக்கு ஐநா மனித உரிமைகள் கூட்டத்திற்கு வருகை தர முடியாத நிலையில் அங்குள்ளவர்கள் எமக்கு ஐநாவிடம் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். இம்முறையாவது எமக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம் எனவும் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் தலைவி குறிப்பிட்டார்.

150 க்கும் மேற்பட்டவர்கள் தனது பிள்ளைகளையும், கணவரையும் இழந்து அவர்கள் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்.

ஆகவே நாங்களும் இறப்பதற்கு முன்னர் எமது பிள்ளைகளை காண வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் தமக்கு நீதியே வேண்டும்- நிதி வேண்டாம் என அவ்வமைப்பின் செயலாளர் செல்வராசா கைரலி தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து உறவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். உலக நாடுகளே எமக்காக வேண்டி குரல் கொடுக்க வேண்டும்.

ஐநா சபை கூட்டத் தொடரின் போது எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற விடயம் பேசப்பட வேண்டும் எனவும் இம்முறை சிறந்த தீர்வினை பெற்று தர வேண்டும் எனவும் தான் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.