விசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில், குடிவரவுச் சட்ட மீறல்கள் மற்றும் கணினி குற்றங்களுக்காக, அதிகளவான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் சீன நாட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இணைய வழியாக பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நாடளாவிய ரீதியில் 157 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய நாட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பு புறநகர் பகுதியாக ராஜகிரிய – மெதவெலிகட பகுதியில் தங்கியிருந்த 120 வெளிநாட்டவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, 10 கோடி ருபாய்க்கும் அதிக பெறுமதியான 300க்கும் மேற்பட்ட கணினிகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.