-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் சந்தி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி பிரதேசத்தில் இருந்து,யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற, குருநகர்-யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த செல்வம் றொபின் என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார், பாரவூர்தியின் சாரதியை கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனையின் பின்னர், அவரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.