இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர், தெனியாய அடிப்படை வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்து சிறப்பித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவில் ஆளாகும் தற்போதைய இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி அமைக்கப்படும் தெனியாய அடிப்படை வைத்தியசாலைக்கு, இந்திய அரசு இலங்கை ரூபாய் 600 மில்லியன் மானிய உதவியை வழங்கவுள்ளது.
மருத்துவமனையின் இடமாற்றப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கட்டுமானத்தின் இறுதிக்கட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு நிறுவப்படும்.
இந்தத் திட்டம், டிட்வா (Ditwah) சூறாவளிக்குப் பின்னர் இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வுக்காக இந்திய அரசு அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த மானியத் திட்டத்தின் மூலம் பொதுவார்டுகள், உயர் சார்பு சிகிச்சைப் பிரிவு (HDU), அவசர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தல் பிரிவு, அறுவைச் சிகிச்சை அறைகள், வெளிநோயாளர் பிரிவு (OPD), ஆய்வகங்கள், மத்திய கிருமி நீக்கப் பிரிவு (CSSD), கதிரியக்கப் பிரிவு, இரத்த வங்கி, உடற்பயிற்சி சிகிச்சைப் பிரிவு மற்றும் சிறப்பு குழந்தைகள் பராமரிப்பு பிரிவு (SCBU) / பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU) உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.
இந்தியா–இலங்கை அபிவிருத்திக் கூட்டாண்மையில் சுகாதாரத் துறை முக்கிய தூணாகத் தொடர்கிறது.
இத்துறையில் இந்தியாவின் முக்கிய பங்களிப்புகளில் நாடு முழுவதும் செயல்படும் 990 சுவசெரிய (Suwa Seriya) அவசர ஆம்புலன்ஸ் சேவை, டிக்கோயாவில் பல்துறை மருத்துவமனை நிர்மாணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சைப் பிரிவு அமைத்தல், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
மேலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானமும் மருத்துவ உபகரணங்கள் வழங்கலும், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நான்கு மாடிகளைக் கொண்ட மருத்துவ வார்டு கட்டடத் தொகுதி அமைப்பும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.