மறைந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் குளியாப்பிட்டிய – பஹல வீரம்புவ பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
அவரது உடலம், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மரணம் பலத்த வெட்டுக் காயங்களினால் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப்போக்கினால் நிகழ்ந்துள்ளதாக பிரேதப் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட விசேட மருத்துவ குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை கண்டறிந்துள்ளனர்.
அத்துடன், அந்தக் காயங்களை அவரே கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி ஏற்படுத்தியிருக்கலாம் என அந்த விசேட தடயவியல் மருத்துவக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கணினி ஊடுருவல் மூலம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
குறித்த அதிகாரியின் பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்காக, 4 பேர் கொண்ட விசேட தடயவியல் மருத்துவ குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது.
அதன்படி, குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், அவரது இரண்டு கால்களிலும் மற்றும் ஒரு கையிலும் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.