சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வௌிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது பயணப்பொதியில் இந்த போதைப்பொருள் தொகையை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் “பசுமை வழி” (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற குறித்த பயணியை இன்று சனிக்கிழமை காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதான மலேசிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இந்த போதைப்பொருள் தொகையை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெற்றுக்கொண்டு டுபாய்க்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப்பொதியில் 03 சொக்லேட் டொப்பி போத்தல்களில், 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் தொகை என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.