-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில், நேற்று வியாழக்கிழமை, வயோதிப பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி (வயது 79) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும்நிலையில், அவர் பணிப்பெண் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறார்.
நேற்று வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பலதடவைகள் அவருக்கு அழைப்பு மேற்கொண்டபோதும், அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அயலவர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்தவேளை, அவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.
சடலத்துக்கு அருகாமையில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்கள் காணப்பட்டதுடன், அவற்றில் ஒன்று முழுமையாக தீர்ந்திருந்தது.
வீட்டின் உள்ளே இருந்த மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அறுக்கப்பட்டு காணப்பட்டது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.