மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயது தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி தலைமுடியை திருத்துவதற்காக வீட்டைவிட்டுச் சென்ற அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரது மனைவி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
பொலிஸார் விசாரணைக்காக அவரது மனைவியை அழைத்து விசாரித்தபோது, கண்டு பிடிக்கப்பட்ட உடல் அவரது கணவருடையது என அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து, குருநாகல் பொது வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் குறித்து மஹவ தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.