முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கோடிக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள ஊழல் வழக்கை விசாரிப்பதற்காக, கொழும்பு உயர் நீதிமன்றம் ஜூன் 17 ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.
இந்த வழக்கு இன்று புதன்கிழமை உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவேல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஜூன் 17 ஆம் திதி விசாரணை தொடங்கும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
மேலும், அரசுத் தரப்பு சாட்சிகள் இருவர் அன்றைய தினம் முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றச்சாட்டுகளின்படி, கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றிய காலத்தில், நிறுவனத்தின் களஞ்சியசாலையில் காப்பட் இடும் ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமான முறையில் வழங்கினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை அவர் ஏற்படுத்தினார் எனக் குறிப்பிட்டு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.