சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஹட்டன் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு வருகை தந்திருந்த பெருமளவிலான மக்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தமது இடங்களுக்கு திரும்புவதற்காக ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் திரண்டிருந்தனர்.
இவ்வாறு வருகை தந்த பயணிகளின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) டிப்போவினால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக ஏனைய டிப்போக்களில் இருந்தும் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு மேலதிக சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஹட்டன் டிப்போ அத்தியட்சகர் பாலித பண்டார வீரசூரிய கருத்துத் தெரிவிக்கையில்,
புத்தாண்டு விடுமுறையை முடித்துக்கொண்டு கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்காக பெருமளவிலான பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்களின் பயண தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஹட்டன் டிப்போ மூலம் ஹட்டனிலிருந்து கொழும்பு வரை 38 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இலங்கை போக்குவரத்து சபை தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய, வெளி டிப்போக்களில் இருந்து மேலதிகமாக 20 பேருந்துகள் வரவழைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, என்றார்.
