நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் ஏப்ரல் வசந்த காலத்தில் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டச் செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் கௌரவ சிவன்ஜோதி யோகராஜா உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த மலர் கண்காட்சி, நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் இன்று சனிக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மலர்கண்காட்சி போட்டியில் பங்குபற்றிவர்களுக்கு கேடயங்களும், பணப்பரிசில்களும் வழங்கும் வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளையும், பார்வையளர்களை மிகுதியாய் கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மலர் கண்காட்சியை காண வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணகள் வருகின்றனர் இவ்வாறு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் இங்கு வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள், மலர் அலங்காரங்கள், மலரால் வடிவமைக்கப்பட்ட அலங்காரங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
இதில் சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
