ஒரு வருடத்தில் நாட்டின் 17 பல்கலைக்கழகங்களிலிருந்து 36 முறைப்பாடுகள்

ஒரு வருட காலப்பகுதியில் நாட்டின் 17 பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடிவதை தொடர்பில் 36 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், பகிடிவதைச் சம்பவங்கள் தொடர்பில் 57 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்காக விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ கருத்து தெரிவிக்கையில், பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க 076 54 53 454 என்ற வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், இந்த தொலைபேசி இலக்கத்திற்கு போலியான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.