ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான ஒற்றுமைக்கு, தனது பதவி தடையாக மாறினால், எந்த நேரத்திலும் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு உடன்பாடு ஏற்பட்டால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று, ரணில் விக்கிரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி, துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்துள்ளது
அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த அதிகாரப்பூர்வ முன்னேற்ற அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார், ஆனால் பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டும் என்று செயற்குழுவிடம் வலியுறுத்தினார்.
ஏனெனில் அவற்றை இழுத்தடிக்க நேரமில்லை, அடுத்த ஆண்டு முதல் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதற்கு ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், சஜித் பிரேமதாச அல்லது வேறு ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு முன்மொழிந்தால், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணையும் யோசனையை தானும் ஆதரிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அத்தகைய ஒற்றுமைக்கு வழிவகுத்தால், எந்த நேரத்திலும் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“நான் நீண்ட காலமாக கட்சித் தலைவராக இருந்து வருகிறேன், நான் நாட்டின் ஜனாதிபதியானேன், நான் மிக உயர்ந்த பதவியை அடைந்துவிட்டேன், நாட்டிற்கு மிகவும் கடினமான தருணத்தில், நான் பொறுப்பேற்று அதை உயர்த்தப் பாடுபட்டேன், எனவே, ஒதுங்குவது எனக்கு ஒரு பிரச்சனையல்ல, ஆனால் இதை விரைவாக முடிக்க வேண்டும்,” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக கூறப்படுகின்றது.