ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், கட்சி தீர்மானத்தை மீறியமைக்காக அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மேலும் 9 அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றிருந்தனர்.

இதில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும், பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது