காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை வீடு உடைக்கப்பட்டு நகை பணம் திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக இன்று புதன்கிழமை காரைதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ரமழான் நோன்பு காலம் என்பதால் வீட்டின் உரிமையாளர்கள் இரவு வணக்க வழிபாட்டிற்கு சென்று திரும்பிய நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் அதிகாலை வேளை குறித்த வீட்டின் உரிமையாளர் நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி மற்றும் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்ததையடுத்து வீட்டின் உரிமையாளர் தங்க நகைகள் பணம் திருடப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் வழிகாட்டுதலில் காரைதீவு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.