வவுனியாவை சேர்ந்த 10 பேரையும் அகதிகள் முகாமில் தங்க வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்-

தலைமன்னாரில் இருந்து படகு மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு ராமேஸ்வரத்திற்கு சென்ற 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் 16 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை  அதிகாலை 6 பேர் அகதிகளாக வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு படகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி பகுதிக்கு சென்றுள்ளனர்.

தனுஷ்கோடி மீனவர்கள் கடலோர காவல் குழும அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரசுத்துறை அதிகாரிகள் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் உள்ளடங்களாக 10 பேர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்ததாக வாக்குமூலம் வழங்கி உள்ளனர்.

அதனடிப்படையில் புதன்கிழமை  ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்ஆனந்த் குறித்த 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமுக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை செவ்வாய்க்கிழமை  காலை மன்னாரில் இருந்து சென்ற 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமுக்கு மாற்ற காவல்துறை நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.