வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து நகை பணம் என்பன கொள்ளை

-பதுளை நிருபர்-

பசறை நகரில் அமைந்துள்ள ஏ&டி பெமிலி மார்ட் எனும் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருடர்களினால் பணம் மற்றும் நகைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பசறை நகரில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தின் கூரைப்பகுதியை உடைத்து உள்ளே இறங்கிய திருடர்கள், சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணமும், மூன்றரை பவுன் தங்க சங்கிலி ஒன்றும், பதின்மூவாயிரம் ரூபாய் பெறுமதியான மோதிரம் ஒன்றும், 25000 ரூபாய் பெறுமதியான தொலைபேசி கட்டண அட்டைகளும், 5300 ரூபாய் பெறுமதியான சிகரட் பக்கட்டுகளும், 30000 ரூபாய் பெறுமதியான பீடி பண்டல்களும் களவாடப்பட்டுள்ளதாக, பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் செயற்பாடுகள் முடிவடைந்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தை நேற்று இரவு 11மணியளவில் மூடிவிட்டு வீடு சென்றுள்ளார்.

இதன்போது, இன்று அதிகாலை சுமார் 8.00 மணியளவில் மீண்டும் வர்த்தக நிலையத்தை திறந்து பார்க்கும் போது, கூரை உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து பொருட்களை பார்க்கும் போதே இவைகள் அனைத்தும் களவாடப்பட்டுள்ளது.

இதுவரையிலும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத போதிலும், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.