களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வங்கி கதவை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் புலத்சிங்கள பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புலத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கியிலிருந்து திருடப்பட்டதாக கூறப்படும் கணினி மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.