ரயில் கட்டண திருத்தம் : ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அதிருப்தி

ரயில் கட்டண திருத்தம் உட்பட சில காரணங்களை முன்வைத்து, நாளை புதன்கிழமை முதல்   மேலதிக நேர சேவையில் இருந்து விலகுவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்தது.

அத்துடன், ரயில் நிலைய அதிபர்கள் சங்கமும் கட்டண திருத்தத்துக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கட்டணத்தை அதிகரிக்காமல் வேறு பல்வேறு வழிகளில் தமது நட்டத்தை ரயில்வே திணைக்களம் குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் அண்மைய எரிபொருள் அதிகரிப்பைத் தொடர்ந்து திணைக்களத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டங்களைக் கருத்திற்கொண்டும் ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை,  அங்கிகாரம் வழங்கியுள்ளது.

பெயரளவிலான கட்டண திருத்தத்தை தாங்கள் எதிர்க்கவில்லை என்று தெரிவித்த நிலைய அதிபர் சங்கம், தற்போதைய சூழ்நிலையில் பாரிய அதிகரிப்பு பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக தாம் பல யோசனைகளை முன்வைத்துள்ளபோதும், அத்தகைய யோசனைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, திறமையற்ற முகாமைத்துவத்துக்கு எதிராகவே தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதை பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும் என,  ரயில் இயந்திர சாரதிகள் சங்கம்  கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் நிலவும் சூழ்நிலையில், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்க நடவடிக்கையைத் ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.