-யாழ் நிருபர்-
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளவாலை பகுதியை சேர்ந்த தர்ஷன் அஸ்வின் (9 மாதங்கள்) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில், ஏப்ரல் மாதம் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
ஆண் குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் குழந்தை மயக்கமுற்றுள்ளது.
இந்நிலையில், சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர், இருப்பினும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.