-மன்னார் நிருபர்-
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்.
மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட வாய்த் தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப்படுத்தியதோடு குறித்த பெண்ணையும் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர்.
நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர் என தெரிய வருகிறது.
குடும்பத் தகராறு முற்றிய நிலையில் கணவன் கொலை செய்யப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உரப்பையில் போட்டு வீட்டின் மலசலகூட குழிக்குள் போட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கொலை சம்பவம் தொடர்பாக மனைவி மன்னார் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் மூர்வீதியில் எவ்வித பதிவுகளும் இன்றி வசித்து வந்துள்ளது தெரிய வருகிறது.
இந்த நிலையில் குறித்த வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் அவரின் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.