-மன்னார் நிருபர்-
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்த இளம் தாய் மரியராஜ் சிந்துஜா (வயது 27) என தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவிக்கையில்,
எனது மகளுக்கு முதலாவது குழந்தையான ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ம் திகதி பிறந்தது. அதன்பின் கடந்த 11ம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறினார்கள்.
7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு கூறியதையடுத்து, கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டது
நானே எனது மகளை மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்தேன்
அதன் பின்னர், கடந்த சனிக்கிழமை எனது மகளுக்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
அன்று இரவு முழுவதும் குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தொடர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்தது.
அதன்பின், அடுத்த நாள் விடியற் காலை ஆறு முதல் ஏழு மணி அளவில் எனது மகள் சுய நினைவை இழந்தார்
அதன்பின் அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது நண்பகல் 11 மணியின் பின்னர் எனது மகள் உயிரிழந்துவிட்டதாக சொன்னார்கள்
குருதிப் பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என உயிரிழந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இறந்த இளம் தாயான சிந்துஜா சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை.
குறித்த பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கனவுகளோடு படித்து திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து உயிரிழந்த இளம் தாய் இனி உயிருடன் மீளப் போவதில்லை.
ஆனால் இறுதி நேரத்தில் கூடவே இருந்து பராமரித்து வந்தவரும் இறந்த பெண்ணின் தாயுமானவர் தெரிவித்த குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபாவை வினவிய போது,
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும்.
எப்படி இருந்தாலும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
