மட்டக்களப்பு வாகரை எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25, 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை நேற்று செவ்வாய்க்கிழமை வன இலாகா என்று கூறி அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியும், மானிடவியலுக்கு ஒவ்வாத நடைமுறைகளை அம்மக்களின் மீது திணித்தும் அம்மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் அங்குள்ள மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இ.சிறிநாத்திடம் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மக்களின் ஆதங்கங்களையும், குமுறல்களையும் கேட்டறிந்து கொண்டார்.
இது தொடர்பாக பிரதேச செயலாளருக்கு உடனடியாக தெரிவித்துடன், பிரதேச செயலாளர் ஊடாக அப்பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகருக்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கு அம்மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றி ஆய்வு செய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.
மேலும் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
குறித்த மக்களின் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதும், அங்குள்ள மக்கள் மூர்க்கமாக தாக்கப்பட்டதும் அம் மக்களின் மனித உரிமை, மனிதாபிமானம் ஆகியவை மீறப்பட்டதையும் மனிதாபிமான ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், மேற்படி மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் அது சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிவித்து அப்பகுதியில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அம்மக்களுக்கு உறுதிமொழியும், ஆறுதலும் வழங்கினார்.
மக்களுடன் தானும், தமிழரசு கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து பக்கபலமாக இருப்பார்கள் என்றும் உறுதியளித்தார்.