ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக இலங்கை பூராகவும் ஆரம்பிக்கப்படவுள்ள “சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் நிகழ்ச்சித்திட்டத்தில் கிழக்கு மாகாணம் பூராகவும் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஐயந்தலால் ரட்ணசேகரவின் வழிகாட்டல்களுக்கமைய இடம்பெற்று வருகின்றது.
அதன் ஓரங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அண்மித்த 23 பிரதேசங்களில் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வானது மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா யுலேகா முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்களான சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி), மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் சுபா சதாகரன், கிளீன் ஸ்ரீலங்கா திட்ட பிரதிநிதிகள், சுற்றுலாத்துறை உத்தியோகத்தர்கள், முப்படையினர், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மீனவ சங்கங்கள், இளைஞர் சம்மேளனம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பில் இடம்பெற்றது.