மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலப் பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, எருவில், மகிழூர் போன்ற பல்வேறு கிராமங்களில் உள்ள பல்வேறு தாழ்நிலப் பகுதிகளும், வீதிகளும், வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளது.
இதனிடையில் மூழ்கியுள்ள தாழ் நிலங்களில் உள்ள வெள்ள நீரை அகற்றும் பணியில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்று வியாழக்கிழமை இரவு முதல் வீசிய தொடர் காற்றினால் மரங்கள் முறிந்து, வீதிகளுக்கு குறுக்காக விழுந்து கிடப்பதையடுத்து, பிரதேச சபை ஊழியர்கள், மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் அதனை அகற்றும் பணி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மட்டக்களப்பில் தற்போது பலத்த காற்று வீசி வருவதுடன் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



