பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் – உளநல வைத்தியர் கதிரமலை உமாசுதன்

-யாழ் நிருபர்-

அத்தியாவசிய மருந்துகள் இல்லாத இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கொரோனா நெருக்கடி ஏற்பட்டது போல தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான நிலையை கடந்து மீள்வதற்கு உள ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஒவ்வொருவரும் பேணவேண்டும்.

மதுபான பாவனை போதைப் பொருள் பாவனையை தவிர்த்து வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்து விபத்துகள் ஏற்படாதவாறு செயல்படுதல் சிறந்தது.

இளைஞர்கள் வன்முறையை தவிர்த்து தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடாது இருப்பது ஆரோக்கியமானது.

பொதுமக்கள் உணவுப்பழக்கங்களில் கவனம் வைத்து உள விருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.