புதைத்து வைக்கப்பட்டிருந்த 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு

முல்லைத்தீவு – உடையார் கட்டுப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் கடந்த மே 31 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட துப்பரவு பணிகளின்போது, புதைக்கப்பட்டிருந்த 7 மண்ணெண்ணெய் பீப்பாய்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில்  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அதன்பின் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதிபதி  அந்த பகுதியில் தோண்டுதல் பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த மண்ணெண்ணெய் பீப்பாய்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

மேற்படி 7 பீப்பாய்களில் இருந்து 715 லீற்றர் மண்ணெண்னை மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த, நடவடிக்கை எடுத்துள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.