பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய மகே கதாவ நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய மகே கதாவ (எனது கதை) என்ற வாழ்க்கைச் சரிதை நூல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 03.45 மணிக்கு கொழும்பு 10, ஆனந்த கல்லூரி, குலரத்ன கேட்பேர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பௌத்த,இந்து,கத்தோலிக்க,இஸ்லாமிய மத்தலைவர்கள் வீற்றிருக்க நூலின் முதற் பிரதி நூல் வெளியிட்டு பதிப்பகத்தின் சார்ப்பில் ஹேர்ஸ் பெர்ணாந்துக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்காரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைதிரிபால சிறிசேன, பிரதமர் தினேஷ் குணவர்தன,சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வரவேற்புரையினை இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர்களில் ஒருவரான பாதில் பாக்கீர் மாக்கார் நிகழ்த்தினார்.

நூல் தொடர்பான கருத்துரைகளை வல்பொல ராகுல பௌத்த கல்வி நிறுவகத்தின் பணிப்பாளரும்,களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கல்கந்தே தம்மானந்த தேரர்,இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான ஏரானந்த ஹெட்டிஆராச்சி மற்றும் பிரபல ஊடகவியலாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய ஆகியோர்களால் நிகழ்த்தப்பட்டது.

நன்றியுரையினை இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நிகழ்த்தினார்.