பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல்

விலை அதிகரிப்பு காரணமாக 200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலை களுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போசாக்கு உணவை பாடசாலைகளுக்கு விநியோகித்து வரும் சமூர்த்தி பெறும் குடும்பத்தினர் இதனைத் தெரிவித் தனர்.

சமூர்த்தி பெறும் குடும்பங்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை விநியோகிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவர்களுக்கு உணவு பொதியொன்றுக்கு 30 ரூபா வழங்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் வாராந்தம் இரண்டு தடவைகள் முட்டை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து நாட்களிலும் ஏதேனும் பழவகையும் கட்டாயம் வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

விலை அதிகரிப்பு காரணமாக சில விநியோகத்தர்கள் ஒரு முட்டைக்கு பதிலாக அரைவாசி முட்டையை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமது பொருளாதாரத்தை வலுப்படுத்த வழங்கப்பட்ட இந்த சந்தர்ப்பமானது, மேலும் வாழ்க்கை சுமையினை அதிகரித்துள்ளதாக சமுர்த்தி பெறும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போசாக்கு உணவு காரணமாக பயன்பெறும் சூழலில், அதனை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.