பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு

-யாழ் நிருபர்-

‘வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பணிகள்’ என்னும் தலைப்பின் கீழ் ‘பசுமையான நாடு ஆரோக்கியமான நாளை’ என்னும் தொனிப்பொருளில், பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குகின்ற ஆரம்ப நிகழ்வானது, இன்று சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/160 கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் 156 மரக்கன்றுகள் இவ்வாறு வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதன்போது கத்தரி, வெண்டி, தக்காளி மற்றும் மிளகாய் ஆகிய பயன்தரு மரக்கறி கன்றுகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டதுடன் வீட்டுத்தோட்டம் அமைப்பதன் அவசியம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

அதன்பின்னர் பயனாளி ஒருவரது வீட்டில், பிரதேச செயலரால் மரக்கன்றுகள் நாட்டியும் வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சங்கானை பிரதேச செயலர் பொ.பிரேமினி, சங்கானை பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க.இலங்கேஷ்வரன், ஜே/160 கிராம சேவகர் பிரிவின் கிராம செயலாளர் சிந்துயன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பவதாரணி, சமுர்த்தி உத்தியோகத்தர் சுதாராணி, சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.