பதுக்கல் மாபியாக்களை தடுக்குமாறு மக்கள் விசனம்

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு ஓட்டமாவடி அமிர் அலி விளையாட்டு மைதானம் மற்றும் வாழைச்சேனை பெற்றோல் நிலைய சந்திப் பகுதிகளில் எரிவாயுவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொண்டாலும் சிலர் தமக்குரிய எரிவாயு சிலிண்டர் கிடைக்காமையினால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலமையினை இல்லாமல் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்றவாறு எரிவாயு சிலிண்டர்களை தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையினை அரசு மேற்கொண்டாலும் சில வர்த்தகர்கள் எரிவாயுக்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் தாம் பெரும் நெருக்கடிக்குள்ளாவதாகவும் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

எரிவாயுவிற்காக காத்திருக்கும் மக்கள் எரிவாயு முகவர்களினால் டோக்கன் வழங்கி வழங்கப்பட்ட டோக்கனுக்கு எரிவாயுக்களை விநியோகித்து வருக்கின்றனர்.

பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது சில வர்த்தகர்கள் தங்களது உதவியாளர்களைக் கொண்டு வெற்றுச் சிலிண்டர்களை கொடுத்து முறையற்ற ரீதியில் எரி வாயுக்களை பெற்று பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் எரிவாயுக்காக வரிசையில் நிற்போர் காத்திருந்து எரிவாயு பெற்றுக் கொள்ளாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இந் நிலமை எரிவாயுவிற்கு மாத்திரமில்லாமல் எரிபொருள் பெறுவதிலும் தொடர்கிறது.

எனவே இவ்வாறு பதுக்கல் மாபியாக்களை இனம் கண்டு பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றனர்.