நீரில் மூழ்கி தகப்பன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 45 வயதான தந்தை மற்றும் 15,10 வயது இரு மகன்கள் ஆவர்.

ஹபரவெவ, கிரிமெடில்ல பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் நேற்று பிற்பகல் தம்பராவ குளத்தில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடி பார்த்ததில் அவர்கள் குளிப்பதற்கு சென்ற இடத்தில் உடைகள் மற்றும் காலணிகள் மட்டும் காணப்பட்டுள்ளது.

பின்னர் பிரதேசவாசிகள் நீரில் மூழ்கியவர்களை மீட்டு மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.