தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுகமு/ மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திருமதி எம்.சி. நஸ்லின் றிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். ரிபாவூதீன் விசேட அதிதியாக கலந்து கொண்டு தேசிய வாசிப்பு மாதம் தொடர்பான சிறப்புரை நிகழ்த்தினார்.
இதன்போது வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிய மாணவர் முன்வைப்புகள் இடம்பெற்றதுடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, சஞ்சிகை மற்றும் வாசிப்பு போட்டிகளுக்கான முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலாசார நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் சாய்ந்தமருது பிரதேச கலாசார போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று பின்னர் மாவட்ட கலாசார போட்டியில் முதலிடம் பெற்று அதன் பின்னர் அகில இலங்கை கலாசார போட்டியான புதுக்கவிதை எழுதுதல் போட்டியில் பங்கு பற்றி அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்ற அன்ஹா ஹம்தூன் எனும் மாணவிக்கான கௌரவிப்பு இதன்போது நடைபெற்றது. இவருக்கான கௌரவிப்பு எதிர்வரும் நவம்பர் 07 இல் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
