தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய 10 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு

-கல்முனை நிருபர்-

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பயிற்சி நிலையத்தின் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த விசேட நிகழ்வும் வருடாந்த இப்தார் வைபகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.ஹாறூன் தலைமையில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலும் விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஓய்வுபெற்ற உதவிப்பணிப்பாளர் ஏ. லத்திப், அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி, மருதமுனை பரக்கத் டெக்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட், ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளர் ஜமால் முஹம்மட், அல்- அமானா நற்பணி மன்ற தலைவர் ஏ.எல். பரீட், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஷமீலுள் இலாஹி, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் போதனாசிரியர்கள், இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் பிரதிநிதிகள், மாணவ மாணவிகள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.ஹாறூன், கடந்த 10 வருடங்களில் இந்த பயிற்சி நிலையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றமை குறித்து சிலாகித்து பேசியதுடன் இந்த பயிற்சி நிலையத்தை சாய்ந்தமருதில் நிறுவி பல்லின மாணவர்களும் பயன்பெற உறுதுணையாக இருந்த அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் கட்டிடத்திலும் ஏனைய வளங்களிலும் உள்ள பற்றாக்குறைகள் தொடர்பில் எடுத்துரைத்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் அதற்கான தீர்வை பெறவேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.

இதன்போது குறித்த பயிற்சி நிலையத்தில் கடமையாற்றி அண்மையில் இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தருக்கு சேவை நலன் பாராட்டி கௌரவமளிக்கப்பட்டது.