தீ அணைக்க முன் பணம் கேட்ட மாநகர சபை

-யாழ் நிருபர்-

 

யாழ். நகரப் பகுதியில் தீயணைப்புக்காக பணம் செலுத்தினால் மட்டுமே தீயை அணைக்க வர முடியும் என யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

நேற்று சனிக்கிழமை யாழ்.சுண்டுக்குளிப் பகுதியில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டது.

தீயை அணைப்பதற்கு யாழ். மாநகர சபைத் தீயணைப்புப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட நிலையில் பணம் கட்டினால் தான் வர முடியும் என உத்தியோகத்தர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டதாக எழுந்த கருத்துத் தொடர்பில் ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாநகர சபையின் தீர்மானத்தை அடிப்படையாக வைத்து கட்டண அறவீடு நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலையில் முற்பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.

இவ்வாறான நிலையில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தவறான கருத்தை கூறியதாக எனக்கும் தகவல் கிடைத்தது

ஆகவே குறித்த உத்தியோகத்தர் பதிலளித்த விதம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும், என அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்