திருகோணமலையை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

-மன்னார் நிருபர்-

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக இன்று சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 129 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை திருகோணமலை மாவட்டம் 2ம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய தாய், 22 மற்றும் 26 வயதுடைய இரு மகன்கள் மற்றும் 19 வயதுடைய மகள் ஆகிய 4 பேரும் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் சென்ற இலங்கை தமிழர்கள் தாங்களாக ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றனர்.

இதனை அடுத்த மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும், தாங்கள் நால்வரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் முகாமில் பதிவில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.

மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், தமிழகத்திற்கு வந்த இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது