-மூதூர் நிருபர்-
அம்மாவின் நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
மூதூர் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், மூதூர் ஆலிம்நகரைச் சேர்ந்த 22 வயதுடைய அவரது மகன், மூதூர் பொலிஸாரினால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டு, நேற்று மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதன் பின்னர் குறித்த கைதி, சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டு பேரூந்தில் ஏற்றுவதற்கு கொண்டு செல்லும்போது தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த இளைஞன் தாயின் கழுத்தில் இருந்த சங்கிலி வளைந்திருப்பதாகவும் அதனை சரி செய்து தருவதாகவும் கூறி போலியான நகையை வழங்கிவிட்டு குறித்த நகையை தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரிய வருகின்றது.
தலைமறைவாகியுள்ள குறித்த கைதியை தேடும் பணியில் மூதூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.