-பதுளை நிருபர்-
பசறை-கோணகலை பசறை டிவிஷன் தோட்ட தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் உள்ள லயமொன்றில் வசிக்கும் தனிநபரொருவர் லயத்தில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை இடித்து விடுதி கட்டும் வேலையில் ஈடுபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அப்பகுதியில் பல்வேறு காணி அபகரிப்பு செயல்களில் ஈடுபடுபவர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் பலா மரம் ஒன்றை வெட்டியதாக தெரிவித்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த நபர் பசறை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரத்ன தெரிவித்தார்.