ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பிச் சென்றதை உறுதிப்படுத்தியது விமானபடை

ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் நாட்டை விட்டு தப்பிச் சென்றதை இலங்கை விமானபடை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரின் துணைவியார் ஆகியோர் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன்  கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு செல்வதற்காக, இன்று புதன்கிழமை அதிகாலை விமானபடையின் வானூர்தி ஒன்றை தாம் வழங்கியதாக இலங்கை விமானபடை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு குடியேற்றம், சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த வானூர்தி வழங்கப்பட்டதாக விமானபடை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 1.45 அளவில் இலங்கை விமானபடைக்கு சொந்தமான அண்டோனோ 32 ரக விமானத்தில் ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.