சதித்திட்டக்காரர்களுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதித்திட்டக்காரர்களுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
அந்த சதித்திட்டக்காரர்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முடியும் ஆனால், ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கத்தோலிக்க திருச்சபையின் சிவில் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த அமைதி பேரணி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமாகி, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை முன்னெடுக்கப்பட்டது.

நீர்கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உரையாற்றியபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
இன்று ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அன்று தேர்தலில் களமிறங்கும் போது இலங்கையில், மிகவும் மோசமான முறையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை முழுமையாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிட்டார்.

இந்த பேரழிவுக்கு பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கலாம் என அப்போது புலப்பட்டது எனவும் சதித்திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது தெளிவாகின்றது என்றும் தெரிவித்தார்.