கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்-

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று  வியாழக்கிழமை மாலை உத்தரவிட்டார்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த புதன்கிழமை  மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைகளை தொடர்ந்து கடற்படையினர் மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின் நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.